Monday, 20 May 2013

ஒளி வேகத்தில் ஓட இருக்கிறேன்..


எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது இன்று மாலை 6.42 வரை.
பொதுவாக,வானத் திரையரங்கில் இரவுக் காட்சி தொடங்கும் நேரத்தில்தான் மைதானம் செல்வது வழக்கம்.இருட்டினுள்,Bat man போல்,அங்குமிங்கும்,உடற்பயிற்சி என்ற பெயரில் ஓடி,அனைவரையும் திகிலூட்டுவது  எனது வாடிக்கை.
இன்றும் அவ்வாறே.
ஓடுவதற்கான முஸ்தீபு நடவடிக்கைகளில் இருந்த வேளையில்..,
" அங்கிள்! நேரம் என்ன? "  
குரல் வந்த திசை பார்த்தபோது, ஓ லெவல் முடித்து ஏ லெவலுக்காய் காத்திருக்கும் 'லுக்'கில் ஒரு  சிறுவன்(?).
நேரத்தை எவன் பார்த்தான்!
அவன் 'அங்கிள்' என்றது மட்டும் அசரீரி போல்,மீண்டும் மீண்டும் ஒலித்தது.
இருளில்,என் முகம் சரிவரத் தெரியவில்லையாக்கும் என்ற நப்பாசையுடன்,அவன் அருகில் சென்று,காது கேளாதவன் போல்,
" என்ன ?" என்றேன்.
" டைம் என்ன அங்கிள்? " என்றான் அந்த கல்நெஞ்சன்!
காலத்தின் வாகனம்,தன் சில்லுகள் பதிய,என்னில் ஏறி இறங்கியிருப்பது புரிந்தது.
" 6.42!!! "
" தாங்ஸ் அங்....." . போய் விட்டான்(உயிர் தப்பி!).

இந்தக் காலம் தான் எவ்வளவு அநீதியானது..?!
அட!நேற்றுத்தானே physics class முடிஞ்சு வரும்போது, முன் மண்டை ஜொலிக்க வந்த, ஒரு பெரிசுவை ,
"அங்கிள்! Bell மூடி, கண்ணைக் கூசுது " என்றோம்..!
அதற்குள் இன்றைக்கு இப்படியா??!!
பரவாயில்லை. அண்ணன் ஜன்ஸ்டீனை நம்பி,நாளையில் இருந்து, ஒளி வேகத்தில் ஓட இருக்கிறேன்......!!!!


பாரம்..பரியம்..!


இன்று இலங்கைத் தமிழ் வானொலி ஒன்றில், 'பாரம்பரியம்' என்பதற்கான அர்த்தத்தை,தமிழ் மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்து ஒலிபரப்பினார்கள்.பலரது கருத்துக்கள் திகிலடைய வைத்தன.
உதாரணத்திற்கு:
" அண்ணே...! பாரம்பரியம் என்றால் என்ன ?"
" பாரம்பரியம்..??"
பெரிய இடைவேளை (யோசிக்க்க்க்கிறார் போல..).
" அது தம்பி.. பண்டைய காலத்தில நடந்த விசயங்கள்.."
" பண்டைய காலமென்றா...?"
" பண்டைய காலமென்றால்..M.G.R காலத்தில என்று சொல்லலாம்..!"
அவர் போய்விட்டார்.
அடுத்ததாய் இன்னொருவர். அதே கேள்வி.
" பாரம்?பரியம்?"
இவர் யோசிக்கவில்லை.
" அது..பாரம் சுமக்கிறதின்ட எல்லை."
" ??.......??....அப்படியென்றா?? "
" இப்ப....,முப்பது கிலோ பாரத்தை சுமக்க முடியாட்டி..அது பாரம்பரியம்!"
"அப்ப..,முப்பது கிலோ பாரம்...'பாரம்பரியம்' ???? "
" இல்லையில்ல.....சில பேருக்கு அது பத்து கிலோவாகக்கூட இருக்கலாம்...!"

இந்தக் கூத்தை உடனே தெரிவிக்க,எமது 'பாரம்பரியத்'தின் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.
" நீங்கள் அழைத்த பாவனையாளர்,தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்" என்றது ஒரு குரல்.
உண்மைதான்!

பட்ட மண்ணில் இட்ட விதைகள்..


அம்மா.....!
சிலுவை அறியா சிறு வயதில்
நெஞ்சில் இட்டாய்
பல விதைகள்.

பொய்கள் சொன்னால்
புரளாது நாக்கு என்றாய்.
புகழுடையோன் மேல் பொறாமை
கண்ணைக் குத்தும் சாமி என்றாய்.
அடுத்தவன் நிலம் அபகரித்தால்
நடக்காது கால்கள் என்றாய்.
சக மனிதன் வீழச் சதிகள்
சாக்கடைதான் முடிவில் என்றாய்.
கூடி நின்று குத்தி விடும் துரோகம்
மீளா நரகம் வாழ்க்கை என்றாய்.
நீதி வழி நடந்தால்
நேரும் பல மேன்மை என்றாய்.
ஊருக்கு உழைத்தால்
உனக்கே உயர்வு என்றாய்.
நட்பு தேடி வளர்த்தால்
நம்பிக்கையில் நாளை என்றாய்.

பொய்கள் பல சொன்னாயம்மா..!
உண்மை அறைந்து
புலம்புகிறான்
உன் மகன்!

பட்ட நிலத்தில்
இட்ட விதைகள்
பயனேது கூறு ?!